1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (16:48 IST)

டிக்டாக்கில் ஆசை ஆசையாக பேச்சு… இளைஞரிடம் இருந்து 97 ஆயிரம் உருவிய இளம்பெண்!

திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மதுரை இளைஞரிடம் ஆசையாக பேசுவது போல பேசி 97,000 ரூபாய் ஏமாற்றியுள்ளார்.

இப்போது இளைஞர்கள் அதிக நேரம் செலவிடும் சமூகவலைதளமாக டிக்டாக் உள்ளது. ஆனால் இதன் மூலம் ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகியுள்ளது. மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த 23 வயதான ராமச்சந்திரன் என்பவர் லாக்டவுன் காலம் என்பதால் டிக்டாக்கில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். அப்போது அம்முக்குட்டி என்ற பெண்ணோடு அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பழக ஆரம்பிக்க முகநூலிலும் தங்கள் நட்பை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் அம்முக்குட்டி தனது பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி, ராமச்சந்திரனிடம் இருந்து 97,000 ரூபாய் வர கறந்துள்ளார். ஒரு கட்டத்தில் டிக்டாக் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் இருந்து அவர் மறைந்துவிடவே ராமச்சந்திரனுக்கு தாம் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவர்  மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து தேடிய போலிஸார் ராமச்சந்திரன் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை வைத்து அந்தப் பெண் திருப்பூர் பகுதியைச்  சேர்ந்தவர் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரது உண்மையான பெயர் சுசி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைக் கைது விசாரணை நடத்தியதில் அவர் இதுபோல பல போலிக் கணக்குகளை தொடங்கி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.