1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (11:24 IST)

நாச்சியார் படத்தில் கெட்ட வார்த்தை - பாலாவுக்கு மாதர் சங்கம் கண்டனம்

நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசுவது போல் டீசரில் இடம்பெற்ற காட்சிக்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


 

 
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜூ.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார் படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது. இப்படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அந்த டீசரின் இறுதியில், ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்து விட்டு அவர் ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது சர்ச்சையை கிளப்பும் எனத் தெரிந்தும், படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே இந்த காட்சி டீசரில் வைக்கப்பட்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம், இதனை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் சிலர், தற்போது மாதர் சங்கம் என்ன செய்கிறது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழ்நாடு மாதர் சங்க தலைவி வாசுகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
நாச்சியார் டீஸரில் பயன்படுத்தபட்டுள்ள தவறான வார்த்தைக்கு மாதர் சங்கம் என்ன செய்தது என்பது தான் இப்போது டிரெண்டிங் போல! 
 
சிம்புவின் கேவலமான பாடலைக் கண்டித்த பின் இந்த கேள்வி எந்த பிரச்சினை நடந்தாலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நோக்கி வீசப்படுகிறது.
 
கேட்பவர்கள் கேள்வியை முக நூலில் பதிவு செய்வதே மிக பெரும் சமூக சேவையாக நினைத்து விடுகிறார்கள். சமூக பணி இவ்வளவு சுலபம் என எண்ணுவதே அவர்களின் அறிவு பற்றாக்குறையைக் காட்டுகிறது. இந்த கேள்வியில் சிம்பு பாடலின் வக்கிரம் உட்பட கடந்த காலத்தில் மாதர் சங்கம் எதிர்த்த பலவற்றை குறித்த பொருமலே வெளிப்படுகிறது. 
 
நியாயமல்ல என்று நினைப்பதை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதை விடுத்து மாதர் சங்கத்தை நக்கல் செய்வது, அறிக்கை விட்டோமே என்றால் ஏன் இயக்கம் நடத்தவில்லை என்பது இயக்கம் நடத்தினோம் என்றால் மீடியாவில் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்பது, போட்டோவை போட்டால் ஏன் போலீஸ் புகார் கொடுக்கவில்லை என கேட்பது.... இப்படி பட்டியல் நீள்கிறது. 
 
எனவே அநீதியை எதிர்ப்பது என்ற அக்கறை 'மாதர்சங்கம் எங்கே போனது?' என்ற கேள்வியில் வெளிப்படவில்லை. நிற்க.... நாச்சியார் டீசர் பிரச்சினைக்கு வருவோம். தே.. வார்த்தை பெண்ணை இழிவு படுத்தும் வார்த்தை. இதன் பூர்வாங்கத்தை பார்த்தால் ஆணின் கட்டற்ற பாலியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குலம். அந்த வழக்கம் மண்மூடி போவதற்கு பல போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது. 
 
குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்த பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீசரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து ஒரு அதிர்வை ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனை தமிழ் சினிமா படைப்பாளிகள் கடைபிடிப்பது தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.