வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (07:08 IST)

புயல் இல்லை, மழை இல்லை, ஆனால் திடீர் வெள்ளம்: சென்னையில் பரபரப்பு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னையில் மழை பெய்து ஏரிகள் நிரம்பி நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மழை பொய்த்துவிட்டதால் சென்னையில் குடிநீர்ப்பஞ்சம் வரும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் இருக்கும் நீரை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டிய நிலையில் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து ஆயிரக்கணக்கனக்கான லிட்டர் தண்ணீர் வீணானதால் குடியிருப்புகளில் வெள்ளம் போல் ஏற்பட்டுள்ளது. இந்த கொடுமை சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பா நகர் பம்பிங் லேன் பகுதியில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு நிலத்தடியில் செல்லும் குழாய் ஒன்றில் நேற்றிரவு திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஆறு போல் ஓடியது.

அதுமட்டுமின்றி அந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் புகுந்ததால் பலவீடுகளில் முழங்கால் அளவு தேங்கியது. புயல் இல்லாமல், ஒருதுளி மழை கூட இல்லாமல் திடீரென வெள்ளம்போல் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததை கண்ட மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனே அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் குடிநீர் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்ட பின் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. தண்ணீரை சிக்கனமாக செலவழிக்குமாறு மக்களுக்கு அறிவுரை சொல்லும் குடிநீர் வாரியம் இருக்கும் தண்ணீரை பாதுகாப்புடன் வைத்திருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.