1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (16:40 IST)

சேப்பாக்கம் அருகே பல்வேறு அமைப்புகள் போராட்டம் - சென்னையில் பரபரப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக் மைதானம் அருகே விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்தன.  
 
அந்நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்திருந்தார். ஆனாலும், எதிர்ப்புகளை மீறி, கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய கட்சியினரை சேர்ந்தவர்கள்  அண்ணாசாலை,  திருவல்லிக்கேனி வழியாக பேரணியாக சென்று சேப்பாக் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
 
இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.