1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (13:25 IST)

ஆளுநருக்கு 2 நாள் கெடு; இல்லையேல்?- எச்சரிக்கும் தினகரன்

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநர் நடவடுக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த நடவடிக்கைகள் அதிரடியாய் இருக்கும் என தினகரன் எச்சரித்துள்ளார்.


 

 
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது. அதில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
அதேபோல், கட்சியை வழி நடத்த வழி காட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முழு அதிகாரம் பொருந்திய அந்த வழிகாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
மொத்தத்தில், சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து விரட்டும் வேலையில் இறங்கிய ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி தரப்பு அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது: 
 
“பொதுச்செயலாளர் சசிகலா மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும். எனவே அவரில்லாத இந்த கூட்டமும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது. இந்த தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும், துரோகமும் கூட்டணி வைத்தும் நடக்கும் ஆட்சியை பொதுமக்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. எனவே இந்த ஆட்சியை விரைவில் அகற்றுவோம்.


 

 
எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், ஆளுநர் இன்னும் 2 நாட்களில் முடிவெடுக்க வேண்டும். இல்லையேல், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும். எடப்பாடி தலமையிலான ஆட்சியை விரைவில் விரட்டுவோம்” எனக் கூறினார்.
 
எனவே, இன்னும் இரண்டு நாட்களில், தற்போதுள்ள ஆட்சியை அகற்றும் வேலையில் தினகரன் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதே சமயத்தில், முடிந்தால் அவர் ஆட்சியை கலைத்துப் பார்க்கட்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பொதுக்குழுவில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.