வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (13:56 IST)

தடையில்லா சான்று கொடுக்காத தமிழக போலீஸ் - சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைப்பாட்டில் அவதிப்படும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். 


 

 
ஆனால், சசிகலா பரோல் கோரிய மனுவில் தகுந்த ஆதாரங்கள் இல்லை மற்றும் சில தொழில் நுட்ப காரணங்களை காரணம் காட்டி அவரின் பரோல் மனுவை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம்  நேற்று நிராகரித்துவிட்டது. மேலும், கூடுதல் தகவல்களுடன் புதிய பரோல் மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. 
 
அந்நிலையில், நடராஜனுக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையும் நேற்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 
 
அந்நிலையில்,  சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி மீண்டும் பரோலுக்கு நேற்று விண்ணப்பித்தார்.. கர்நாடக மாநிலம் அக்ரஹார சிறை கண்காணிப்பாளரிடம் அவர் அதற்கான மனுவை அளித்துள்ளார். இந்த முறை நடராஜன் சிகிச்சை குறித்து அனைத்து ஆதாரங்களையும் அவர் அந்த மனுவுடன் இணைத்துள்ளதால், கண்டிப்பாக பரோல் கிடைக்கும் என கூறப்பட்டது.
 
அதேபோல், அவர் அப்படி வெளியே வந்தால் அதிமுகவில் சில மாற்றங்கள் ஏற்படும் எனவும், சில அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சசிகலா பக்கம் வருவார்கள் எனவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுவதால், சசிகலாவின் பரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில், சசிகலாவின் பரோல் தொடர்பாக தமிழக காவல்துறையிடமிருந்து தடையில்லா சான்று இதுவரை எங்களுக்கு வரவில்லை என அக்ரஹார சிறைக் கண்காணிப்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.
 
தமிழக காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா வெளியே வருவதற்கு செக் வைக்கும் விதமாகவே இந்த விவகாரம் கருதப்படுகிறது.