வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூன் 2018 (12:01 IST)

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாது: முதல்வர் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டாவது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்துவிட்டால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்ததால் விவசாயிகள் கவலையில் மூழ்கினர்.
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ': "குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்றும், அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது என்றும் கூறியுள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டோடு சேர்த்து ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,594 கன அடியில் இருந்து 2,190 கன அடியாகக் குறைந்துவிட்டது. மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 39.42 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 11.79 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது