வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (13:00 IST)

5 லட்சம் ரூபாய் கடனுக்காக 65 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்த பைனான்சியர்

ஈரோட்டில் 5 லட்சம் ரூபாய் கடனுக்காக 65 லட்சம் ரூபாய் நிலத்தை அபகரித்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற பைனான்சியரிடம், விவசாய செலவிற்காக, தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தை சுரேஷின் கூட்டாளியான உதயகுமார் என்பவரின் பெயருக்கு சுத்த கிரையம் செய்துகொடுத்து  5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார் ஈஸ்வரமூர்த்தி. 8 மாதம் கழித்து ஈஸ்வரமூர்த்திக்கே தெரியாமல், சுரேஷ் பெருந்துறையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு ஈஸ்வரமூர்த்தியின் நிலத்தை 65 லட்சத்துக்கு  விற்றுள்ளார். சுரேஷிடம் இதுபற்றி கேட்டதற்கு உன் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். மேலும் சுரேஷ், ஈஸ்வரமூர்த்தியின் விவசாய நிலத்தில் அடியாட்களைக்கொண்டு அத்துமீறி விவசாயம்செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஈஸ்வரமூர்த்தி தனது குடும்பத்தினருடன் ஈரோடு எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். மேலும் தங்களை ஏமாற்றிய பைனான்சியர் சுரேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தங்களின் நிலத்தை மீட்டுத் தரும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.