1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (09:29 IST)

கவர்னரால் கன்னத்தில் தட்டப்பட்ட நிருபருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்டாலின் - கனிமொழி

நேற்று ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 'நீங்கள் என் பேத்தி போன்றவர்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் கவர்னரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கவர்னரின் இந்த செயலுக்கு அந்த பெண் நிருபர் தன்னுடைய டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கூறியபோது 'துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல' என்று கூறியுள்ளார். அதேபோல் திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து கூறியபோது, 'நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம்.  பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல.  சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை' என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே தமிழக அமைச்சர் ஒருவர் சமீபத்தில் பெண் நிருபர் ஒருவரை பார்த்து 'நீங்க அழகாக இருக்கின்றீர்கள்' என்று கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் தற்போது கவர்னரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.