செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (16:53 IST)

என் தேடல் உன்னோடு முடியுமா? - வைரமுத்து மீது மற்றொரு பெண்ணும் புகார்

கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என சிந்துஜா ராஜாராம் என்கிற பெண் கூறியுள்ளார்.

 
15 வருடங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்ற போது, தனது அறைக்கு வருமாறு வைரமுத்து அழைத்தார் என சின்மயி மற்றும் அவரின் தாயார் ஏற்கனவே புகார் கூறியிருந்தனர். ஆனால், அதை வைரமுத்து மறுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என கூறியுள்ளார்.சின்மயியை தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூறியிருந்தனர். ஆனால், வைரமுத்து தரப்பு தொடர்ந்து இதை மறுத்து வருகிறது.
 
இந்நிலையில், வைரமுத்துவால் பாடகியாகும் கனவையே விட்டு விட்டதாக சிந்துஜா ராஜாராம் என்கிற பெண் கூறியுள்ளார். தி குயிண்ட் என்கிற இணையதள இதழில் இது குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார்.
 
அவரிடம் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு பாடல் பதிவின் போது அவரை நான் சந்தித்தேன். அப்போது, எனது குரலும், உச்சரிப்பும் பிடித்திருப்பதாக அவர் கூறினார். அதன்பின் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசுவார். அலுவலகத்திற்கு அழைப்பார்.
 
திடீரென ஒரு நாள் ‘ஒரு அறிவான பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன். என் தேடல் உன்னில் முடிந்துவிடுமோ? என்றார். உன் கண்கள் என்ன கூர்வாளா? என் கவிதைகளை துண்டு துண்டாகி உன் காலில் கிடக்கிறதே” என்றார்.  அவரின் உள்நோக்கம் எனக்கு புரிந்தது.  இப்படி என்னிடம் பேசாதீர்கள் என்றேன்.
 
ஒரு நாள் மலேசியா செல்கிறேன். என்னுடன் வர முடியுமா என்றார். நான் மறுத்தேன். உன்னை சினிமா உலகிலே இல்லாமல் செய்து விடுவேன். உனக்கான அனைத்து கதவுகளையும் சாத்தி விடுவேன்” என மிரட்டினார்.
 
நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டேன். அதன் பின் என் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்து என்னை பாடவிடாமல் செய்தார். அதனால், பாடகியாகும் என் ஆசையையே விட்டு விட்டேன். இப்போது சின்மயியின் செயல்களை பார்த்து எனக்கும் தைரியம் வந்துள்ளதால் இதுபற்றி பேசுகிறேன்” என அவர் அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.