வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (13:20 IST)

எதுவுமே செய்ய மாட்டார்கள் : எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ விளாசிய செந்தில் பாலாஜி (வீடியோ)

பிரிந்த இயக்கத்தை இணைப்பதற்காக பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் தொடர்ந்து பிரதமரை மாற்றி மாற்றி பார்த்தவர்கள் இப்பொழுது காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பிரதமரை பார்ப்பதற்கு மறுக்கின்றார்கள் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

 
கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின், கரூர் மத்திய நகர கழக கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  கரூர் மத்திய நகர செயலாளர் கோல்டுஸ்பாட் ஆர்.எஸ்.ராஜா தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளருமான வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதை மத்திய அரசு மதிக்கவில்லை. இன்று வரை செயல்படுத்த மறுக்கிறது. தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வருகிறது.  ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மேலாண்மை வாரியம் அமைத்திருக்க செய்திருப்பார். இல்லையென்றால் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்.  
 
டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் பேச திறமையும் இல்லை தைரியமும் இல்லை. காரணம் ஒபிஎஸ், ஈ.பி.எஸ் இருவரின் உறவினர்களும் வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளனர். மேலும் வருமான வரித்துறையினரின் சோதனையிடமிருந்து அவர்களை காக்கவும், மேலும் அவர்களது குடும்பம் மற்றும் உறவினர்களை காப்பதற்காகவே, மத்திய அரசிடம் அவர்கள் இதுவரை அழுத்தம் தரவில்லை என குற்றம் சாட்டினார்.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்