வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2017 (15:44 IST)

ஜெ.விற்கு மகள் இருக்கிறார் ; சசிகலா, நடரஜனுக்கு மட்டுமே தெரியும் - ஜெ.வின் அண்ணன் பகீர் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா என்பவர் கூறியிருக்கும் நிலையில், ஜெ.வின் அண்ணன் முறையான வாசுதேவன் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.


 

தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். 
 
ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார்  என லலிதா கூறியிருந்தார்.
 
இந்நிலையில், பெங்களூரில் வசித்து வரும் ஜெ.வின் அண்ணன் வாசுதேவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


 

 
எனது தந்தை ஜெயராமன் இரண்டாவதாக வேதம்மாள் என்கிற சந்தியாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா. அந்த வகையில் ஜெயலலிதா எனக்கு தங்கை முறை. 
 
அதன் பின்பு ஜெ.வின் அம்மா சந்தியா சினிமா கலை இயக்குனர் தாமோதப்பிள்ளை என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு சைலஜா என்கிற மகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால், சைலஜாவை சந்திக்க முடியவில்லை. என்னைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு நாள் சைலஜாவும், அவரது வளர்ப்பு மகள் அம்ருதாவும் என் வீட்டிற்கு வந்தனர். அவர் கூறியதை வைத்து, அவர்தான் ஜெ.வின் தங்கை என்பது ஏற்றுக்கொண்டேன். அதன்பின், அவர் குடும்பத்திற்கும் எங்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் உடல்நிலை சரியில்லாமல் சைலஜா மரணமடைந்தார். அதன்பின் அவரின் கணவர் பார்த்தசாரதியும் மரணமடைந்தார்.
 
அப்போது எனது தந்தை வழி உறவினர்களான ரஜினிநாத், லலிதா ஆகியோரை அம்ருதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். தற்போது அம்ருதா தன்னை ஜெ.வின் மகள் எனக் கூறியிருக்கிறார். 
 
ஜெ.விற்கும், சோபன்பாவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும்,, அந்த பெண் வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். இதுபற்றிய அனைத்து உண்மைகளும், சசிகலா - நடராஜனுக்கு மட்டுமே தெரியும். அவர்கள்தான் மற்றவர்களுக்கு கூறவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 
ஜெ.விற்கு நான்தான் மகள் என அம்ருதா கிளம்பிய பின், ஜெ.வின் உறவினர் லலிதா மற்றும் வாசுதேவன் போன்றவர்கள் அடுத்தடுத்து கூறி வரும் தகவல்கள் பரபரப்பை கூட்டி வருகிறது.