வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (16:36 IST)

அதிமுக எம்.எல்.ஏ-வின் மூக்கை வாலிபர் உடைத்தது ஏன்? - வெளியான செய்தி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் மூக்கை வாலிபர் ஒருவர் உடைத்ததற்கான பின்னணி வெளியாகியுள்ளது.

 
எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் நேற்று இரவு போளூரில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற போது வாலிபர் ஒருவர் அவர் முகத்தில் திடீர் தாக்குதல் நடத்தினார். இதில் எம்.எல்.ஏ நிலைகுலைந்தார். அவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. இதுகண்டு அதிர்ச்சியான எம்.எல்.ஏ.வின் ஆட்கள், அந்த வாலிபரை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
 
இந்நிலையில், அந்த வாலிபர் எம்.எல்.ஏ.வை ஏன் தாக்கினார் என்பதற்கான சில செய்திகள் வெளியாகியுள்ளது.
 
4 நாட்களுக்கு முன்பு கலசப்பாக்கத்தில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சார்பில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு மேடை அமைத்துக் கொடுத்த வசந்தமணி என்பவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. பணத்தைக் கேட்டு வசந்தமணி நச்சரித்த போது பன்னீர் செல்வம் மிரட்டும் தொனியில் பேசி, பணம் தர முடியாது எனக் கூறிவிட்டாராம்.
 
இதனால் ஆத்திரமடைந்த வசந்தமணி, திருமண விழாவிற்கு வந்த பன்னீர்செல்வத்தை தாக்கியுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.