வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (14:28 IST)

ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகி வரும் நிலையில் பல கல்லூரிகளில் போதுமான மாணவர்கள் சேராததால் இழுத்து மூடப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் இயங்கி கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் அண்ணா பல்கலைகழகம்  2017-18-ஆம் கல்வி ஆண்டின் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான  தேர்ச்சி பட்டியிலை வெளியிட்டது. இந்த பட்டியலில் முதலாம் ஆண்டு தேர்வில் 43 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட அனைத்து பேப்பர்களிலும் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதுமட்டுமின்றி 143 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான  மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 409 கல்லூரிகளில் 50 சதவிகிதத்தினர்களுக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில், 'பிளஸ் 2 வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வதால் கல்லூரிகளில் தேர்வு எழுதுவது அவர்களுக்கு கடினமாக இருப்பதாகவும், எனவே மாணவர்கள் புளூபிரிண்ட் போல் மனப்பாடம் செய்யும் போக்கை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.