1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 நவம்பர் 2017 (13:44 IST)

மீண்டும் விசாரணைக்கு வரும் சுவாதி கொலை வழக்கு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.


 

 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
 
இன்றுவரை இந்த கொலை குறித்து சில விஷயங்கள் மர்மமாக இருந்து வருகிறது. இந்த சம்பவத்தை திரைப்படமாகவும் எடுத்து வருகின்றனர். ஆனால் அந்த படம் வெளியாவதற்கு பல தடைகள் எழுந்துள்ளது.
 
தங்களது மகளின் இழப்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி சுவாதியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே எங்களது மகளின் கொலை நடந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் 3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திடம் இழப்பீடு கோருவோர் ரயில்வே தீர்ப்பாயத்தை அணுகவேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
 
இதையடுத்து சுவாதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், 8 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு வழங்க தீர்ப்பயத்திற்கு உரிமை உள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது என தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் சுவாதி கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.