வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (18:31 IST)

’இதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது’ - சுவாதியின் தந்தை உருக்கம்

சுவாதி கொலையுண்ட இடத்தில் கிடந்த அவருடைய அடையாள பார்த்து கூட எங்களுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. இது வேதனை அளிக்கிறது என்று படுகொலையான சுவாதியின் தந்தை கூறியுள்ளார்.
 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெள்ளியன்று [ஜூன் 24ஆம் தேதி] காலை சுவாதி வாலிபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’எனது மகள் கொலை தொடர்பாக உறுதிபடுத்தப்படாத பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. யாராலும் அவளது உயிரை திருப்பி தர முடியாது.
 
ஆனால் அவளுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தகவல்களை ஏன் பரப்ப வேண்டும். கொலை தொடர்பான அனைத்து விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.
 
சுவாதி கொலையுண்ட இடத்தில் அவருடைய அடையாள அட்டை மற்றும் டை ஆகியவை கிடந்துள்ளன. அதை பார்த்து கூட எங்களுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை. இது வேதனை அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.