1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (16:39 IST)

வெறிச்சோடிய மதுக்கடைகள்: கூவிக்கூவி அழைக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்

வெறிச்சோடிய மதுக்கடைகள்
தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் கடந்த 7 ஆம் தேதியிலிருந்து திறந்தாலும் உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக 9ஆம் தேதி மூடப்பட்டு அதன் பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் மீண்டும் 16ஆம் தேதி மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டநிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டது. மதுக்கடை திறந்த மூன்றாவது நாளிலேயே, மதுப்பிரியர்களின் வருகை குறைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் இன்று காலை முதல் ஒருவர் கூட இன்னும் மது வாங்க வரவில்லை என்ற தகவல் வெளி வந்துள்ளது
 
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் கையில் சுத்தமாக காசே இல்லை. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் மது கடைகள் திறந்த வேகத்தில் முதல் இரண்டு நாட்கள் கடன் வாங்கி மது வகைகளை வாங்கி குடித்தனர்
 
ஆனால் தினந்தோறும் கடன் கொடுக்க ஆளில்லை என்பதால் மது வாங்க பொது மக்களிடம் காசு இல்லை என்பதுதான் மதுக் கடைகளில் கூட்டம் குறைந்ததும் காரணமாக கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு கையில் பணப்புழக்கம் ஏற்பட்டவுடன் மீண்டும் மதுக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது