வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (08:24 IST)

சின்னதம்பி யானையை விரட்ட வந்த கும்கி யானைக்கு திடீர் உடல்நலக்குறைவு!

கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் என்ற வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததை அடுத்து சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அதன்பின் வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விவசாய உணவுப்பொருட்களை சாப்பிட்டு ருசிகண்ட சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் வந்ததால் அந்த யானையை கும்கி யானையை வைத்து விரட்ட முடிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் சின்னதம்பி யானையை விரட்ட வந்த ஒரு கும்கி யானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த யானை மீண்டும் முகாமுக்கு திரும்புகிறது. மாரியப்பன் என்ற இந்த கும்கி யானை, சின்னத்தம்பியை விரட்ட கடந்த சில நாட்களாக முயற்சித்தது. ஆனால் தற்போது இந்த யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நாளை சுயம்பு என்ற கும்கி யானை வருவதாகவும் இந்த யானையின் உதவியால் சின்னத்தம்பியை விரட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறையினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.
 
மேலும் சின்னத்தம்பி யானைக்கு தற்போது சமூக வலைத்தள ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். சின்னத்தம்பிக்கு ஆதரவாக பல பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருவதால் அந்த யானையை பார்க்க சின்னதம்பி முகாமிட்டுள்ள பகுதிகளில், தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். காட்டிற்குள் யானைய அனுப்பும் 'ஆபரேஷன் சின்னதம்பி' முயற்சியை பொதுமக்கள் திரண்டு பார்க்க கூடியதை அடுத்து அந்த பகுதியில் தற்காலிக கடைகளும் முளைத்துவிட்டனன.