வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (11:33 IST)

கருணாஸுக்கு களி : சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏவுக்கு அக்டோபர் 5ம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

 
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும் தனது ஜாதிப் பெருமையை இஷ்டத்திற்கு அளந்து பேசினார். 
 
இதையடுத்து கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 
 
அதன்பின் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணை முடிந்த பின் அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கருணாஸ் மீதான கொலை முயற்சி பிரிவு(307) ரத்து செய்த நீதிபதி, அவரை அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
 
இதையடுத்து, கருணாஸ் சிறையில் அடைக்கப்படவுள்ளார். அதேபோல், கருணாஸ் தரப்பில் நாளை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.