ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (21:40 IST)

இந்த ஆண்டு நமக்கும்‌, தமிழகத்துக்கும்‌ முக்கியமான. ஆண்டு: கமல்ஹாசனின் புத்தாண்டு வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நாளைய புத்தாண்டை முன்னிட்டு தனது கட்சியினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பிறக்கும்‌ இந்த புதிய ஆண்டு நாம்‌ கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறும்‌ ஆண்டு மட்டும்‌ அல்ல. கரம்‌ கோர்த்து களமாட வேண்டிய ஆண்டு. கடந்த ஆண்டு நம்‌ கட்சிக்கு வளரிளம்‌ ஆண்டு. பயமறியா இளங்கன்றாய்‌, கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில்‌ நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ தனித்து களம்‌ கண்டு, நாம்‌ வென்றிருப்பது, மூன்றாவது பெரிய கட்சி எனும்‌ பெயர்‌ மட்டுமல்ல, மக்களின்‌ நம்பிக்கையையும்‌ தான்‌.
வரும்‌ ஆண்டு நமக்கும்‌, தமிழகத்துக்கும்‌ முக்கியமான. ஆண்டு. தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல நேர்மையான, அறிவார்ந்த தலைமை வேண்டும்‌ என்ற நம்‌ சிந்தனை, செயல்‌ வடிவம்‌ பெற வேண்டிய ஆண்டு.
 
நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ செய்ததை விட பல மடங்கு பணி நமக்கு காத்திருக்கிறது. இன்னும்‌ ஓராண்டில்‌ வரப்போகும்‌ சட்டமன்ற தேர்தலில்‌ நாம்‌ பெறப்போகும்‌ வெற்றி, தமிழகம்‌ வளர்ச்சியை விரும்புகிறது என உலக அரங்கிற்கு நாம்‌ விடுக்கப்போகும்‌ அறை கூவல்‌. நீங்கள்‌, நான்‌, நாம்‌ அனைவரும்‌ இணைந்து களம்‌ கண்டால்‌ தரணியில்‌ தமிழகம்‌ தழைத்தோங்கி, பாரதி கனவு கண்டது போல, வான்‌ புகழ்‌ கொண்ட தமிழகமாக மீண்டும்‌ ஆக்கலாம்‌.
 
இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம்‌ வெற்றிப்பயணமும்‌ தான்‌. வெற்றிக்குத்‌ தயாராகுங்கள்‌. நாளை நமதே. அனைவருக்கும்‌ என்‌ ஆங்கிலேயப்‌ புத்தாண்டு வாழ்த்துக்கள்‌.
 
நாளை நமதே.
உங்கள்‌ நான்‌
 
 
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.