வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (16:40 IST)

ஜெ.வின் சிகிச்சை வீடியோ: லண்டன் மருத்துவர் பீலேவை மாட்டிவிட்ட தினகரன்!

ஜெ.வின் சிகிச்சை வீடியோ: லண்டன் மருத்துவர் பீலேவை மாட்டிவிட்ட தினகரன்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.


 
 
இந்த செய்தி தற்போது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் தற்போது கூறிய இந்த தகவலுக்கு முற்றிலும் எதிரான தகவலை சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் பல்வேறு தகவல்கள் சந்தேகத்தின் அடிப்படையில் உலா வந்தது. குறிப்பாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் இணையத்தில் பல முரண்பட்ட தகவல்கள் வந்தவாறு இருந்தன. இவற்றிற்கு பதில் அளிக்கும் விதமாக லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே செய்தியாளர்களை சந்தித்தார்.
 
ஜெயலலிதா மரணமடைந்து 60 நாட்களுக்கு பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே. அப்போது அவர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அவரோடு சேர்ந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
 
அப்போது செய்தியளார்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவின் அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என கூறினார். பொதுவாக நோயாளிகள் அறையில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாது என்றும் அவர் கூறினார். ஒரு வேளை கேமராக்கள் இருந்தாலும் அவை சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
 
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்களே இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பீலே கூறுகிறார். ஆனால் தினகரன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் உள்ளது என கூறியுள்ளார். இவர்கள் இருவரில் யார் பொய்யான தகவலை கூறுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என கேள்வியெழுந்துள்ளது.