வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (13:53 IST)

செந்தில் பாலாஜிக்கு செக்: நண்பரின் நிறுவனத்துக்கு சீல் வைத்த வருமான வரித்துறை!

செந்தில் பாலாஜிக்கு செக்: நண்பரின் நிறுவனத்துக்கு சீல் வைத்த வருமான வரித்துறை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் அவரது நண்பர் ஒருவரின் நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளனர்.


 
 
செந்தில் பாலாஜிக்கு ஆளும் தரப்பினால் கட்டம் கட்டப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவர் மீதான பழைய புகார்களை தமிழக காவல்துறை தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் கைதாக இருக்கிறார் எனவும், குண்டர் சட்டம் பாய இருக்கிறது எனவும் தகவல்கள் பரவின.
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வலம் வந்தார். இந்நிலையில் அவர்களின் ஆட்டத்தை அடக்க ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கும் ஆயுதத்தை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்ததாக இவர்மீது புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் ஆட்டத்தை அடக்க அவர் மீதான மோசடி புகார்களை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
 
இது தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் உட்பட அவர் தொடர்புள்ள அனைத்து இடத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விதமாக அவரது நெருங்கிய நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.