1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (10:34 IST)

சசிகலாவை சிறையில் வைத்தே விசாரணை? - நீதிபதி ஆறுமுகசாமி அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான ஆறுமுகசாமி, சசிகலாவிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் குறித்தான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. 
 
இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது அரசு. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியவர்களிடமும், ஜெயலலிதா தொடர்புடையவர்களிடமும் தனது விசாரணையை நடத்தி வருகிறது. 
 
இதனையடுத்தும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சசிகலா 15 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் மெயிலில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது.
 
இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்தார் சசிகலா. மேலும் அந்த விவரங்கள் கிடைத்த 15 நாட்கள் கழித்து பதில் தர தான் தயாராக இருப்பதாகவும் சசிகலா கூறியுள்ளார். 

 
எனவே, விசாரணை ஆணையமும் சசிகலா எழுப்பிய கேள்விக்கு பதில் தர முன்வந்துள்ளதால் விரைவில் சசிகலாவிடம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், ஜெ.வின் மரணம் குறித்து சசிகலாவிடம் சிறையில் வைத்தே விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகசாமி திட்டமிட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும். ஜெ. முதல்வராக இருந்த போது அவரது செயலர்களாக பணிபுரிந்த, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, மருத்துவமனையில் ஜெ. இருந்த போது அவரது கை ரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜியிடம் நேற்று நடத்திய விசாரணையில் ஆறுமுகசாமி கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.