வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (07:58 IST)

வருமான வரித்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது; சசிகலா திட்டவட்டம்

மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என  வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தினார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நேரடி அரசியலில் இறங்கினர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேர்தலின் போது ரெய்டு நடத்திய வருமான வரித்துறை கடந்த இரண்டு மாதங்களில் சசிகலா குடும்பத்தையும், அவர்கள் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களிலும்  சோதனையை நடத்தினர்.
 
சசிகலாவின் உறவினரான கார்த்திகேயனின் வீடு, ஸ்ரீ சாய் கார்டன், ஸ்ரீ சாய் நிறுவனம்,  மிடாஸ் நிறுவனம், மேலும் தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.  இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணக்கில் வராத ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி உள்ளிட்டோர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி பதிலளித்தனர்.
 
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு சிறை நிர்வாகம் மூலம் கடிதத்திற்கு பதிலளித்துள்ள சசிகலா, தான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறையினர் முன்னிலையில் ஆஜராக இயலாது என்று கூறியுள்ளார். விரதம் முடிந்த பிறகு நேரில் ஆஜராவது குறித்து சொல்கிறேன் என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.