1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (15:54 IST)

நேரத்த கொறச்சா எப்படி மாசு குறையும்? – பொதுமக்கள் கேள்வி

பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த உச்சநீதிமன்றத்ஹின் தீர்ப்பால் பொது மக்கள் குழப்பமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கருதி சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என உறுதியாகக் கூறிய நீதிபதிகள், அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் எனவும் கூறினர்.
 

ஆனால் அந்த உத்தரவையும் மாற்றி இன்று தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்  அதிகாலை காலை 4 - 5 மணி முதலும், இரவு 9-10 மணி முதலும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றமே நேரத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அதிகாரி வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு பொதுமக்களிடையேப் பல கேள்விகளையும் குழப்பத்தையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது. பட்டாசுகளின் உற்பத்தியைக் குறைக்காமல் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மட்டும் குறைத்தால் எப்படி சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் எனவும் ஒருநாள் முழுவதும் வெடிக்க வாங்கிய பட்டாசுகளை இரண்டு மணிநேரத்திலேயே வெடித்து முடித்துவிட்டால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதிக காற்று மற்றும் ஒலி மாசுபாடு ஏறபடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டாசுகளை அதிகமாக வெடிப்போர் குழந்தைகள் தான். அவர்களை நாம் சட்டம் போட்டு கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் அனுமதித்த நேரமல்லாத மற்ற நேரங்களில் பட்டாசுகளை வெடித்தால் காவல்துறையால் அவ்ர்களை கைது செய்ய முடியுமா? எனவும் அப்படி கைது செய்தால் எத்தனைக் குழந்தைகளைக் கைது செய்வர் எனவும் கேள்வியினை எழுப்பியுள்ளனர்.

வருடம் முழுவதும் போக்குவரததாலும் தொழிற்சாலைகளாலும் காற்றும் ஒலியும் எவ்வளவு மாசடைகின்றன. அதையெல்லாம் தடுக்காமல் ஏழை எளிய மக்கள் ஒருநாள் தங்கள் கஷ்டம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதை இப்படி தடுக்கப்பார்க்கிறதே நீதிமன்றம் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது.