1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (09:24 IST)

இந்த விவரங்களை திரட்டி போராட்டம்: எச்.ராஜா அதிரடி அறிவிப்பு!

நேற்று வெளியான புதிய கல்விக்கொள்கையின்படி இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தி மொழியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவொரு வாய்ப்பு தானே தவிர கட்டாயமில்லை என்றும் அந்த கல்விக்கொள்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் அமலில் இருக்கும் என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
 
இருப்பினும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக ஆவேசமாக அறிக்கை விட்டு வருகின்றனர். தேர்தலின்போது இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்தி மொழியில் போஸ்டர் அடித்து ஓட்டு கேட்ட திமுக, தற்போது இந்தி பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்திருப்பதை நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில், 'திமுக, மதிமுக எம்பிக்கள் எம்எல்ஏக்கள், திக, திமுக, மதிமுக, மாநில, மாவட்ட, ஒன்றிய செயளாளர்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் பற்றிய விவரம் திரட்டுவோம். அக்குழந்தைகளை இந்தி கற்பிக்கும் பள்ளியில் இருந்து டிசி பெற்று தமிழ் பள்ளியில் சேர்க்க வைக்கும் போராட்டம் துவங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். உண்மையில் இப்படி ஒரு விவரங்களை திரட்டினால் பலருடைய குழந்தைகள் இந்தி படித்து கொண்டிருக்கும் உண்மை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் எச்.ராஜா இன்னொரு டுவீட்டில், 'புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத போது நேசமணி. மற்றும் இந்தி எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி கூக்குரலிடுவது எஸ்.ஆர்.எம் கல்லூரி தற்கொலைகள் விஷயத்தை திசைதிருப்பவே. முதலில் சன்ஷைன் பள்ளியை ஸ்டாலின் இழுத்து மூடட்டும். வெட்கம் கெட்டவர்கள் என்று பதிவு செய்துள்ளார்.