செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (15:57 IST)

கழுத்தறுப்பு... தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த விவசாயி : எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள எட்டு வழிச்சாலை பசுமை திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  
 
இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது. 
 
அதோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை, திருவண்ணாம்லை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை, வேதிமலை என பல மலைகள் இரண்டாக உடைக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட இருக்கிறது.

 
இந்த திட்டத்தை எதிர்க்கும் சமுக ஆர்வர்கள்  மற்றும் விவசாயிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நடிகர் நடிகர் மன்சுர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை. 
 
ஒருபக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், இதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் போலீசாரின் துணை கொண்டு செய்து வருகிறார்கள். பல பகுதிகளில் நிலங்கள் அளக்கப்பட்டு, கற்கள் நடப்பட்டு வருகிறது. ஆனாலும், அதிகாரிகள் செல்லும் இடம் எங்கும் விவசாயிகள் கடும் எதிப்பும், கண்ணீர் மல்க கோரிக்கையும் வைத்து வருகின்றனர். சிலர் அதிகாரிகள் நடும் கற்களை பிடுங்கி எறிந்து விடுகின்றனர்.

 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதிதியில் விவசாயிகள் நிலத்தில் கற்களை அதிகாரிகள் பதித்தபோது, ஒரு விவசாயின் மகள் ‘அந்த கல்லை எடுங்கள். இல்லையேல் கழுத்தை அறுத்துக்கொள்வேன். எனக்கு உயிரைப்பற்றி கவலை இல்லை’ எனக்கூறி தனது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு அந்த இளம்பெண் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார். அவரை அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றனர். அதை ஏற்காத அப்பெண் ஒரு கட்டத்தில் கழுத்தையும் அவர் அறுத்துக்கொண்டார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
 
அதேபோல், அதேபகுதியில் வசிக்கும் ஒரு விவசாயி தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றார். இதனால், அதிகாரிகள் நிலத்தை அளக்காமல் திரும்பி சென்றனர். அதேபோல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு முதியவர் கிணற்றில் குதித்தார். அதன்பின் அவரை சிலர் காப்பாற்றினர். 
 
மொத்தத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.