1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (12:29 IST)

தந்தை-மகள் விஷம் குடித்து தற்கொலை: மதுரையில் பரபரப்பு

மதுரை அருகே சாலையோர பள்ளத்தில், தந்தை-மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் சாலையோரத்து பள்ளத்தில் ஒரு ஆணும், சிறுமியும் இறந்து கிடந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே அருகிலுள்ள ஆஸ்டின்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்பு போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் இறந்து கிடந்த ஆண், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சேரன் நகரைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் கிங்ஸ்டன் கிருபாகரன் என்றும் தெரிய வந்தது.

41 வயதான கிருபாகரன், கோவையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர். இவரின் உடல் அருகில் டிரைவிங் லைசென்ஸ், சிம்கார்டு இல்லாத செல்ஃபோன், விஷ மருந்து மற்றும் கைப்பை ஆகியவை கிடந்தன.

கிருபாகரனுடன் அவரது 8 வயது மகளும் இறந்து கிடந்தார். மேலும் கிருபாகரனின் கையில் ஒரு தொலைப்பேசி எண் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை.

கிருபாகரனும் அவரது 8 வயது மகளும் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை. இந்நிலையில் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருமங்கலம், ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிருபாகரனும் அவரது மகளும் எதற்காக திருமங்கலம் பகுதிக்கு வந்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.