1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (10:14 IST)

நீட் வந்ததற்குக் காரணமே திமுக & காங்கிரஸ்தான் – எடப்பாடி பழனிச்சாமி !

திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் பற்றிய அறிவிப்பு வெளியானது என எடப்பாடி பழனிச்சாமிக் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்த இரண்டு தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்தது.  இந்த தகவலை சட்டத்துறை அமைச்சர் மறைத்து விட்டதாக இன்று சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு மசோதா கொண்டு வந்தது. மேலும் இந்த விஷயத்தில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியது. இது சில நாட்களாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது சம்மந்தமாக மதுரைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பியபோது ‘2010ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்த போதுதான் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவிடப்பட்டது. அப்போது அதை அவர்கள் எதிர்க்கவில்லை. மக்களிடம் எதிர்ப்பு வந்தவுடன் இப்போது பழியை எங்கள் மீது சுமத்துகின்றனர்.. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது’ எனப் பதிலளித்துள்ளார்.