1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (18:48 IST)

எல்லாம் பொய் ; அது சசிகலா வாக்குமூலம் இல்லை : விசாரணை ஆணையம் மறுப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான செய்திகள் தவறானவை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 
 
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலா, விசாரணை ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரம்மாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார் எனவும், அதில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாகவே, ஜெ.வின் உடல்நிலை எப்படி பாதிக்கப்பட்டது, ஜெ. மருத்துவமனையில் இருந்த போது  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமைச்சர் ஓ.பி.எஸ், தம்பிதுரை, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் அவரை பார்த்தனர் என சசிகலா தரப்பில் குறிப்பிட்டிருந்ததாக இன்று காலை செய்திகள் வெளியானது.

 
மேலும், செப்.22ம் தேதி போயஸ்கார்டன் வீட்டில் என்ன நடந்தது என்பதுபற்றி குறித்து சசிகலா கூறியதாக செய்திகள் வெளியானது. அதேபோல், ஜெ.வின் அனுமதி பெற்று அவர் சிகிச்சை பெறும் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது என சசிகலா அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த செய்திகளை விசாரணை ஆணையம் மறுத்துள்ளது.சசிகலா தரப்பை நியாயப்படுத்தும் வகையில் ஆங்கில நாளிதழில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெ.வுக்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக நாளிதழில் வெளியான தகவலும் தவறு. ஜெ.வை ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர், நிலோபர் கஃபில் ஆகியோர் பார்த்ததாக வெளியான தகவலும் தவறு. ஆங்கில நாளிதழில் வந்த தகவல்கள் பெரும்பாலும் தவறானவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
சசிகலாவின் வாக்குமூலங்கள் என காலையிலிருந்து பல செய்திகள் வெளியானது. ஆனால், அதில் எதுவெல்லாம் தவறு. யார் அதை வெளியிட்டது என்ற தகவல் தெரியவில்லை. 
 
இந்த விவகாரம் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.