வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (12:29 IST)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு.! 6 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று  ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2016 ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு விடைத்தாள் மாற்றப்பட்டு, முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதான கருணாநிதி என்பவர் விசாரணையை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ' டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 விடைத்தாள் மாற்றிய வழக்கில், 65 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு 10 பேரிடம் விசாரணை நிறைவடைந்து விட்டது என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாள் முறைகேடு வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். 

6 மாதங்களில் வழக்கு விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.