1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:57 IST)

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போனால் என்ன நடக்கும் – நீதிமன்றம் பதில்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறுவோர் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு மக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என கூறியுள்ள நீதிமன்றம், மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது.

இந்நிலையில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்க பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் “விநாயகர் சிலை வைத்து வழிபடுவது இந்துக்களின் விருப்பமாக உள்ளது. அரசு அனுமதித்தால் ஊரடங்கு விதிகளை மீறாமல் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் அன்பழகன் என்பவர் வழக்கு தொடுத்தார். அதில் ‘தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் எனக் கூறி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசை மிரட்டுகிறார்கள். இதனை நீதிமன்றம் தலையிட்டு தடுக்க வேண்டும். ‘ எனக் கோரினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘அரசிற்கு வரும் மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. எனவே அரசின் உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’ எனக் கூறி வழக்கை முடித்துள்ளனர்.