1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (14:02 IST)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் – தலைமறைவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்வது தொடர்பாக பெண்ணுடன் ஏற்பட்ட தகராறால் அவரை அறைந்த தீட்சிதர் தலைமறைவாகியுள்ளார்.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த லதா. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் இவர் சிதம்பரம் கோவிலுக்கு தனது மகனின் பிறந்தநாளுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய், பழம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.  லதா தன் மகனின் பெயர் மற்றும் ராசி நட்சத்திரம் ஆகியவற்றை சொல்வதற்கு முன்பாகவே அர்ச்சகர் தேங்காயை உடைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதனால் லதா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். இது சம்மந்தமாக கேட்டதற்கு அந்த பெண் தன்னுடைய செயினை பறிக்க வந்ததாகவும் அதனால்தான் அறைந்ததாகவும் பொய் சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீட்சிதர் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீட்சிதர் தலைமறைவாக அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.