1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (17:30 IST)

சூப்பர்மார்க்கெட்டை கொள்ளையடித்த கும்பலில் பாஜகவினர்! – சிசிடிவி வீடியோ சிக்கியது!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய சம்பவத்தில் பாஜகவினர் பலர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் ஷாநவாஸ். அந்த சூப்பர்மார்க்கெட் உள்ள நிலம் ரஃபீகா என்பவருக்கு சொந்தமானது. கடை ஒப்பந்த விவகாரத்தில் இருவருக்குமிடையே பிரச்சினை உள்ள நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல சூப்பர்மார்க்கெட்டை ஊழியர்கள் திறந்தபோது சரசரவென உள்ளே புகுந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிசிடிவி கேமராக்களை உடைத்ததுடன், கடையில் உள்ள பொருட்களையும் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் போலீஸ் வருவதற்குள் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து மினிவேனில் ஏற்றிக்கொண்டு சிலர் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கடைக்குள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் 10க்கு மேற்பட்டோர் பாஜக ஐடி பிரிவு, கலை இலக்கிய பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சிசிடிவி வீடியோக்கள் கிடைக்கக்கூடாது என கொள்ளையடித்தவர் சிபியூவையும் தூக்கி சென்றுள்ளனர். ஆனால் சிசிடிவி காட்சிகள் பதிவான டிவிஆர் பெட்டி கடையிலேயே இருந்ததால் அதை வைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.