செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (15:02 IST)

திருமுருகன் காந்தி தேசவிரோதமாக என்ன பேசினார்? - விளாசிய நீதிமன்றம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச துரோக வழக்கில்  கைது செய்ததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 
திருமுருகன் காந்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்றார். ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.  பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார். 
 
அப்போது அவரை பெங்களூர் விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். தேசதுரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். இதையடுத்து, பெங்களூர் சென்ற தமிழக காவல்துறையினர் திருமுருகன் காந்தியை சென்னை நேற்று சென்னை அழைத்து வந்தனர்.
 
தேசதுரோக வழக்கு, அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என மூன்று வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது.
 
இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தமிழக காவல் துறைக்கு நீதிபதி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தேசவிரோதமாக என்ன பேசினார்? அவரை ஏன் இவ்வளவு அவசரமாக கைது செய்தீர்கள்? அவர் பேசிய வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என சரமாரியாக அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது. வேண்டுமானால் 24 மணி நேரமும் அவரிடம் விசாரணை செய்து கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்து விட்டார்.