வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (15:12 IST)

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு புது சிக்கல் !

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடப்பது போல இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கணக்கில் கொண்டு மாணவர்களும் பள்ளிகளும் 11 ஆம் வகுப்பைப் பாடங்களைப் படிக்காமல் நேரடியாக 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை நடைமுறையில் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தோல்வி அடையச்செய்யாமல் வெற்றிப் பெற வைக்கும் இந்த முறையால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவ, மாணவிகள், அடுத்த இரண்டு மாதங்களிலேயே மறுத்தேர்வை எழுதலாம் என்றும் அதிலும் தோல்வி அடையும் மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து இன்னொரு ஆண்டு படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அதிகமாகும் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.