1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (17:13 IST)

வேடிக்கை பார்க்கும் தமிழகமே! வீதிக்கு வந்து போராடு - மெரினாவில் முழக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

 
இன்று மதியம் 3.30 மணியளவில், மெரினாவில் கூடிய சில இளைஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போரட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் பிடித்தவாறு கடற்கரையில் நிற்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அவர்களில் சிலரை போலீசார் தடுத்து, அறிவுரை வழங்கி அங்கிருந்து அவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதற்கிடையே அங்கு ஊடகங்களும், தொலைக்காட்சி வாகனங்களும் வந்து சேர பரபரப்பு ஏற்பட்டது. எனவே, கடற்கரையில் எங்கேனும் இளைஞர்கள் போரட்டத்தில் ஈடுபடுகிறார்களா என போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
 
இந்நிலையில், அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்த போலீசார் அவர்களை போலீஸ் வாகனத்தில் கடற்கரை வழியாக அழைத்து சென்றனர்.
 
அப்போது, காரில் இருந்த போராட்டக்காரர்கள் “வேடிக்கை பார்க்கும் தமிழகமே! வீதிக்கு வந்து போராடு” என முழக்கங்கள் எழுப்பினர். மேலும்,  அவர்கள் செய்தியாளர்களிடம் “காவல்துறைக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம். ஸ்டெர்லைட் ஆலையால் அவர்களின் குழந்தையும் பாதிக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அவர்களின் குழந்தையும் தண்ணீர் இன்றி அவதிப்படும்.. எனவே, எங்களை கைது செய்துள்ள அவர்களுக்கு இதுதான் செய்தி. போராட்டம் வெற்றி பெறும்” எனக் கூறினர்.
 
இதனால் மெரினா கடற்கரையில் காற்று வாங்க வந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.