1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (17:01 IST)

ஜெயலலிதா மரணம் –விசாரனை ஆணையம் மேலும் மூன்று மாத அவகாசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் மேலும் மூன்று மாதக்காலம் அவகாசம் கேட்டுள்ளது.

ஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 75 நாட்களும் மருத்துவர்கள், சசிகலா தவிர வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அப்போது ஜெயலலிதாவைப் பார்த்ததாக சொல்லப்பட்டவர்களும் கூட தற்போது நாங்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. சசிகலாவை மட்டும்தான் பார்த்து உடல்நிலைப் பற்றி தெரிந்துகொண்டோம் என மாற்றிக் கூறியுள்ளனர்.

இதனால் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் நீடித்ததாகவே இருந்து வந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் பழச்சாறு குடிப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே ஜெயலலிதா மர்ணத்தில் மர்மம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷன் ஒன்று தமிழக அரசால் அமைக்கப் பட்டது. ஓய்வெபெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த ஆணையம் விசாரனையை மேற்கொண்டு வருகிறது.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.

அதேப்போல, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகே முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் ஓராண்டாக்கும் மேலாக விசாரனையில் ஈடுபட்டு வரும் ஆணையத்தின் விசாரனைக் காலம் வரும் அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைவதை அடுத்து தங்களுக்கு மேலும் மூன்று மாதக்காலம் அவகாசம் வேண்டுமென ஆணையம் கேட்டுள்ளது.