வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (13:31 IST)

மக்களின் வரிப்பணம் வீணாகிறது –உயர்நீதிமன்றம் கண்டனம்

புதிய தலைமைச் செயலக கட்டிடம் விவகாரம் தொடர்பான வழக்குக் குறித்து, அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படும் முடிவுகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது
 


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சட்டசபையும் தலைமச்செயலகுமும் ஒரே கட்டிடத்தில் இயங்குவதால் ஏற்படும் இடநெருக்கடியைத் தடுக்க  புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அவரது நேரடி மேற்பார்வையில் இந்த கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு கட்டிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்  அவர்களால் திறக்கப்பட்டது. அதில் கருணாநிதி தலைமையில் சட்டசபைக் கூட்டமும் நடைபெற்றது.

ஆனால் 2011-ல் ஜெயலலிதா முதல்வரான பின்னர் புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றிவிட்டார். அத்துடன் பழைய தலைமைச்செயலகத்தையே அவர் பயன்படுத்தினார். மேலும் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு இருந்ததாகவும் கூறிய அவர் இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி அவர்களை தலைவராக கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைக்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  இந்த வழக்கை ஏற்ற  உயர்நீதிமன்றம் இந்த விசாரணைக் கமிஷனுக்கு செலவானத் தொகையைக் கேட்டறிந்து இதுபோன்ற விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்ற கருத்தைத் தெரிவித்தது. இதனையடுத்து புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்துவந்த ஆணைய தலைவர் ரகுபதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விசாரணை ஆணையம் பற்றி உயர்நீதிமன்றம் கூறிய கருத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், ஓய்வுபெற்ற பிறகு ஏதேனும் பதவியை தேடி செல்வதை போல் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து கூறியுள்ளதாகவும் ஆணையர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்தது. இதைத் தொடர்ந்து ரகுபதி தலைமையிலான விசாரணைக் கமிஷனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை  இன்று திமுக வாபஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய உச்சநீதிமன்றம் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமணையாக மாற்றியதால் மக்களின் வரிப்பணம்தான் வீணானது என்றும் அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படும் இந்த முடிவுகளால் மக்களின் வரிப்பணமே வீணாகிறது எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.