1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (07:58 IST)

துப்பாக்கி சூட்டால் ஒரு காலையே இழந்த வாலிபர்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 
 
இந்த துப்பாக்கி சூட்டில் பிரின்ஸ்டன் என்ற வாலிபரின் வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் பிரின்ஸ்டனின் வலது கால் மூட்டுக்கு கீழே சிதைந்துவிட்டது. இதனால் அவரது காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழ் பகுதி ஆபரேஷன் மூலமாக முழுமையாக அகற்றப்பட்டது.
 
இதுகுறித்து கூறிய பிரின்ஸ்டனின் பெற்றோர், பிரின்ஸ்டன் எங்களுக்கு ஒரே மகன் என்பதால் அவனை செல்லமாக வளர்த்தோம். பாலிடெக்னிக் முடித்த பிரின்ஸ்டனுக்கு சென்னையில் வேலை கிடைத்த போதும் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லை. அதனால் பிரின்ஸ்டன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தான்.
 
போராட்டம் நடந்த அன்றும் பிரின்ஸ்டன் இருசக்கரத்தில் வேலைக்கு தான் சென்று கொண்டிருந்தான். அப்போது நடந்த அசம்பாவிதத்தில் எனது மகன் காலை இழந்துவிட்டான். இதுகுறித்து துணை முதல்வரிடம் கூறிய போது அவர், அரசு வேலை தருவதாக கூறினார். எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்கள் பிரின்ஸ்டனின் பெற்றோர்கள்.