ரஜினியை சந்தித்து ஆறுதல் பெற்ற அபிராமி கணவர் விஜய்
Last Modified புதன், 5 செப்டம்பர் 2018 (19:00 IST)
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் கள்ளக்காதலனுடன் வாழ தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கொலை செய்தார் என்ற அதிர்ச்சி செய்தி தமிழகத்தையே உலுக்கியது. அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரது கணவர் விஜய்க்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்
இந்த நிலையில் விஜய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனையறிந்த ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் விஜய்யை தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று கொண்ட விஜய், சற்றுமுன் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கண்ணீர் விட்ட விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது