வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (15:48 IST)

கவிதை - பஞ்சுமிட்டாய்க்காரன்

கடலலை ஆரவாரித்தது போல
தெருவில் சிறார்களின் சப்தம்
வெளியே
பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி
வேடிக்கைப் பார்ப்பது போக
மிட்டாய் வாங்க போட்டிப் போட்டு
கையை நீட்டுவது ஒருபுறமாக 
 
அவன்
கையிலிருக்கும் கிலுகிலுப்பையை
ஆட்டியபடியே
நின்றுகொண்டிருக்க
 
அவனது
தலைப்பாகையையும் அழுக்கு
கந்தலாடையையும் கண்டு
தெரு நாய்கள்
குரைக்க குரைக்க அவன்
 
வியாபாரத்தில் குறியாக 
இருந்தான்
 
ஒரு ஏழைச்சிறுமி குறைந்த
காசை நீட்டியபோது அதை
வாங்காது
திருப்பிக் கொடுத்து
 
பஞ்சுமிட்டாயைக் கொடுத்து
கன்னத்தைக் கிள்ளி
பிளைன் கிஸ் தந்து
நகர்ந்ததைக் கண்டு
 
யாரும்
ஆச்சர்யப்படாமலில்லை
 
அந்த
பஞ்சுமிட்டாயின் சிவப்பு
நிறத்தைப் போலவே
அவனது வறுமையின் நிறமும்
தெரிந்துகொண்டிருந்தது
தொலைவில்....
 
- கோபால்தாசன்