1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவத்திற்கு பயன்படும் எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கை பொருள்கள்

சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, காய்சல் முதலியவற்றை நீக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

 
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை  குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
 
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப்  பூச்சிகள் வெளியேறும். 
 
வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும். 
 
அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும். சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும்(வேர்க்கொம்பு), பனை வெல்லத்தையும் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் போதும்.
 
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
 
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும். தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு இருமல், சளியை  போக்கும்.
 
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத்  தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
 
முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும். உடல் எடை குறைந்தவர்கள்  வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.