வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மழைக்காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வுகள்

தற்போது அதிகம் மழை பெய்துக் கொண்டிருப்பதால் நம்மில் பலர் இந்த சளி தொல்லையால் அவதியுற்றுக் கொண்டிருப்போம்.  சளி தொல்லையில் இருந்து நீங்க சிறந்த நிவாரணம் உங்கள் அருகிலே உள்ளது.

 
சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக்  குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.
 
துளசி இலையை மென்று அதன் சாரை விழுங்கினாலே சளி நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும். இது தவிர சுலபமான  சில வழிமுறைகளை நீங்கள் கையாண்டால் இந்த சளிக்கு தீர்வு காணலாம்.
 
கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து  பருகவும்.
 
2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும். உங்கள் நெஞ்சு  சளியை உடனே தீர்க்கும்.
 
1 மேசை கரண்டி தேன் மற்றும் 2 மேசை கரண்டி எலுமிச்சை சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் 3 வேளை  குடிக்க சளித்தொல்லை நீங்கும்.
 
1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும். சீரகத்தை நன்கு பொடி செய்து  பனங்கற்கண்டுடன் தினமும் 2 வேளை சாப்பிட்ட வேண்டும். இது சளி இருமலை போக்கும்.
 
வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும். கருந்துளசி இலைகளை 1 லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகுவது மட்டுமில்லாமல், அந்த துளசி இலைகளை மென்று முழுங்க வேண்டும்.
 
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தட வேண்டும். இது நெஞ்சு சளியைப் போக்கும்.  கற்பூரவல்லி இலை சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க சளி நீங்கும்.
 
பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும். ஒரு  கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15  நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.
 
சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு  தினங்களில் சளி நீங்கும். மிளகை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட சளி நீங்கும்.
 
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்;  தொண்டை உறுத்தலை நீக்கும்;  சளியையும் குறைக்கும்.