வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (16:04 IST)

டெல்லி முதல்வரை விளாசிய உயர்நீதிமன்றம்: அதிர்ச்சியில் ஆம் ஆத்மி

போராட்டம் செய்வதென்றால் வெளியில் சென்று போராட்டம் செய்யுங்கள், டெல்லி துணை நிலை ஆளுனர் இல்லத்தில் போராட்டம் நடத்த யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது என்று டெல்லி ஐகோர்ட் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விளாசியுள்ளதால் ஆம் ஆத்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஒரு வாரமாக துணை நிலை ஆளுனர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய போராட்டத்திற்கு பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த  நீதிபதிகள் ஏ.கே. சாவ்லா, நவீன் சாவ்லா ஆகியோர் டெல்லி முதல்வருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.  நீங்கள் போராட்டம் நடத்துவதென்றால் துணை நிலை அலுவலகத்துக்கு வெளியே தாராளமாக நடத்தலாம். நீங்கள் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது யார்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வேறு ஒருவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றனர். 
 
இருப்பினும் போராட்டத்தை உடனே நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை. இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் நீதிபதிகள் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்