வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (23:17 IST)

முத்தலாக் கூறினால் மூன்று ஆண்டுகள் சிறை: மக்களவையில் மசோதா

இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது அம்மத வழக்கமாக இருக்கும் நிலையில் இதனை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்றும், இதுகுறித்து 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த பரிந்துரையின் அடிப்படையில் இன்று மக்களவையில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவின்படி இனிமேல் இஸ்லாம் ஆண்கள் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த சட்டத்தை மீறுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். . அத்துடன், முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவனிடம் தனக்கும் தனது குழந்தைக்கும் நிவாரணம் வழங்குமாறு கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

மக்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இருக்குமா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.