1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (16:33 IST)

பேச்சு வார்த்தை தோல்வி ; தண்ணீர் தர முடியாது : அடம்பிடிக்கும் சித்தராமய்யா

பேச்சு வார்த்தை தோல்வி ; தண்ணீர் தர முடியாது : அடம்பிடிக்கும் சித்தராமய்யா

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா மீண்டும் கை விரித்துள்ளது.


 

 
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை, கர்நாடக அரசு மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி, மத்திய அரசுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இதையடுத்து மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில், டெல்லியில் உள்ள ஷ்ராம் சக்தி பவனில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழகம் சார்பாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
 
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையும் வாசிக்கப்பட்டது. அதில் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்திவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 


 


 
அதன்பின் பேசிய சித்தராமய்யா “இதற்கு மேல்  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தி விட முடியாது.  அப்படி வழங்கினால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். 2015-16ஆம் ஆண்டு நீர்பருவ ஆண்டு கர்நாடகாவிற்கு மோசமாக அமைந்துவிட்டது. உண்மை நிலையை கண்டறிய நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.
 
எனவே இக்கூட்டத்தில் எந்த இறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உமாபாரதி “இரு மாநிலங்களின் கருத்துகளையும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்று கூறினார்.