1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (10:14 IST)

பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது போல் மேகாலயாவில் நடந்த சம்பவம்

மேகாலயாவில் ரயில்வே போலீஸ் உதவி கமிஷனரை சக போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெரியபாண்டியன் என்ற காவல் அதிகாரி கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானிற்கு போலீஸ் படையுடன் சென்ற போது அவரை சக காவல் அதிகாரியே சுட்டுக் கொன்றார். அதேபோல் மேகாலயாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
 
மேகாலயா மாநிலம் சில்லாங் மாவட்டத்தில், வங்காளதேச நாட்டின் எல்லையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கு முகேஷ் தியாகி என்பவர் உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றி வருபவர் அர்ஜின் தெஸ்வால். முகேஷ் தியாகிக்கும் அர்ஜின் தெஸ்வாலுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த அர்ஜின் தெஸ்வால்,  முகேஷ் தியாகியை துப்பாகியால் சுட்டார். 
 
அதனை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர் பிரதீப் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் யாதவ், மற்றொரு போலீஸ்காரர் ஜோகிந்த் குமார் ஆகியோரையும் சுட்டிருக்கிறார். இதில் முகேஷ் தியாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 3 போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    
 
இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய அர்ஜின் தெஸ்வாலை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். காவலரை சக காவல் துறையினரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.