1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (06:46 IST)

லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் ஓடவில்லை

இந்தியா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் லாரி உரிமையாளர்கள் தங்களுடைய வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் இந்தியாவில் 65 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. இந்த வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்தும் லாரிகள் வேலைநிறுத்தம் சற்றுமுன் தொடங்கியது. டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பது, தனிநபர் காப்பீடு தொகை உயர்வு, சுங்கவரி ஆகியவைகளை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அகில இந்திய லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் இதனால் ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக மத்திய அரசு லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.