வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (16:44 IST)

அரிசி திருடியதாக ஆதிவாசி வாலிபர் அடித்துக் கொலை...

அரிசி திருடியதாக கூறி  மலைவாழ் இன வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள் ஒருவரை கண்டுள்ளனர். அவர் கையில் அரிசி மூட்டை ஒன்று இருந்துள்ளது. தவாலம், முக்கலி பகுதில் அடிக்கடி உணவுபொருட்கள் திருடு போயுள்ளது. அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபரோடு, இவரின் உருவம் ஒத்துப் போக பொதுமக்கள் அவரைப்பிடித்து சராமரியாக அடித்து உதைத்து அவரை போலீசாரிடம் ஒப்படத்தனர். ஆனால், போலீஸ் ஜீப்பிலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
 
விசாரணையில், அவர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது(27) என்பது தெரியவந்துள்ளது. மேலும், வயிற்றுப்பசிக்காக சிறு சிறு திருட்டை அவர் செய்து வந்தார் எனவும் தெரிகிறது.  அவரை பிடித்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும், அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
 
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வர, அவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், கேரள முதல்வர் பினராஜி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதால், அந்த வாலிபரை தாக்கியவர்கள் பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதுவரை 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.